Monday, June 3, 2019

பழைய சிமென்ட் சாக்குகளில்கூட செடிகளை வளர்க்கலாம்

பழைய சிமென்ட் சாக்குகளில்கூட செடிகளை வளர்க்கலாம். பழைய சாக்குகளை புரட்டிப் போட்டு தண்ணீரில் அலசி காயவைத்து, மளிகை கடைகளில் அரிசி சாக்கை சுருட்டி வைத்திருப்பார்களே.. அதுபோல செடிகளுக்கு ஏற்ப சாக்கின் உயரத்தை வைத்துக் கொண்டு, அதற்கு மேல் உள்ள பகுதியை சுருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். சாக்கின் அடிப் பகுதியில் தேங்காய் மட்டையைப் போட்டு, அதன் மேல் மட்கிய இலை தழைகளை ஒரு அடுக்குப் போட வேண்டும். மீதமுள்ள கொள்ளளவில் பாதியளவுக்கு செம்மண், மணல் கலந்த கலவையை இட்டு... ஒரு கிலோ தொழுவுரம், ஒரு கைப்பிடி வேப்பம் பிண்ணாக்கு, அதே அளவு எலும்புத்தூள், கொஞ்சம் சுண்ணாம்புத் தூள் ஆகியவற்றை இடவேண்டும். பிறகு நமக்கு விருப்பமான செடிகளை நடவு செய்யலாம். தேங்காய் மட்டை போடுவதால், தண்ணீர் கீழே வடியாமல் இருப்பதோடு, மண்ணும் உறுதியாக இருக்கும்.
 பிவிசி பைப்பிலும் பயிர் வளர்க்கலாம்! பழைய பிவிசி பைப்களை இரண்டு அடி நீளத்திற்கு எடுத்துக் கொண்டு, இரண்டு பக்கமும் மூடிப் போட்டு விட்டு, மேல் பகுதியை கொஞ்சம் அறுத்து, அதிலும் மண்ணைக் கொட்டி செடிகள் வளர்க்கலாம். சில நாடுகளில் அறுவடை முடிந்த வாழை மரங்களை எடுத்து, அதன்மேல் பகுதியில் பள்ளம் ஏற்படுத்தி அதில் செடிகளை வளர்க்கிறார்கள். வீணாகும் பொருட்களிலும் விவசாயம்!

No comments:

Post a Comment