Wednesday, June 5, 2019

ஆரோகியத்தை உறுதிப்படுத்தும் மொட்டை மாடி காய்கறிகள் !

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் நகரத்திலிருந்து அருமனை செல்லும் சாலையில், ஐந்தாவது கிலோ மீட்டரில் இருக்கும் மேல்புறம் கிராமத்தில் இருக்கிறது, ஷிஜியின் வீடு. மலையாளம் கலந்த தமிழில் உற்சாகமாகவே பேசுகிறார் ஷிஜி.

                                 ‘‘என் கணவர் அணில்குமார், பில்டிங் கான்ட்ராக்டர். நான் வீட்டுலயே டெய்லரிங் ஷாப் வெச்சுருக்கேன். எங்களுக்கு விவசாய நிலம் இல்லை. முன்னாடி, சந்தையில்தான் காய்கறிகளை வாங்கிட்டிருந்தோம். என் கணவர், ‘இந்த காய்கறிங்க ரசாயன உரத்துல விளைஞ்சது. உடலுக்குக் கேடுதான் வரும்’னு அடிக்கடி ஆதங்கப்படுவார். அதனாலதான், ‘நாமளே நமக்குத் தேவையான காய்கறிகளை இயற்கை முறையில் சாகுபடி செய்தா என்னா?’னு தோணுச்சு. அதுக்கப்பறம்தான் மொட்டை மாடியில தோட்டம் போட்டேன். அஞ்சு வருஷமா இந்தத் தோட்டம்தான் எங்களுக்கு காய்கறிகளைக் கொடுத்துட்டிருக்கு’’ என்று பெருமையோடு சொன்னவர், மொட்டைமாடி விவசாய அனு  பவங்களை  எடுத்து வைத்தார்.

காய்கறி முதல் கீரை வரை!
                    ‘‘எங்க மாடியோட பரப்பளவு 900 சதுரடி. முட்டைகோஸ், காலிஃப்ளவர், தக்காளி, பயறு வகைகள், முள்ளங்கி, மல்லி, கத்திரிக்காய், வழுதலங்காய், சின்னவெங்காயம், கிழங்கு வகைகள், கீரை வகைகள்னு எல்லாமே இங்க விளையுது. மொட்டை மாடியில் காய்கறித் தோட்டம் போட்டா, தண்ணி இறங்கி கட்டடத்துக்கு பாதிப்பு வந்துடும்னு நிறைய பேர் சொன்னாங்க. அதனால, நான்கடி இடைவெளியில் ஹாலோ பிளாக் கற்களை அடுக்கி அதுக்கு மேல பலகைகளை வெச்சு அது மேலதான் தொட்டியில் செடிகளை வச்சுருக்கேன். கல்லுக்குப் பதிலா கொட்டாங்குச்சிகளை வரிசையா அடுக்கி வெச்சும் பலகைகளைப் போட்டுருக்கேன்.

மண்தான்  பிரதானம் !

 வீட்டுத் தோட்டத்தில் கவனிக்க வேண்டிய விஷயமே மண்தான். கண்ட இடத்துல மண்ணை அள்ளிட்டு வந்து போடக்கூடாது. நான் செம்மண்ணும், மணலும் கலந்த கலவையோடு எலும்புத் தூள், சுண்ணாம்புத்தூள், வேப்பம் பிண்ணாக்கு எல்லாத்தையும் கலந்து தொட்டியில் போட்டிருக்கதால நல்ல இயற்கை உரமா இருக்கு. எங்க ஊரு சந்தையில் இருக்குற கடையிலேயே விதைகள் கிடைக்குது.
    ஒவ்வொரு விதைக்கும் ஒவ்வொரு விதம்! 
ஒவ்வொரு விதையையும் விதைக்கறதுக்கு சில வழிமுறைகள் இருக்கு. வெண்டை விதையை வெள்ளைத் துணியில் கட்டி அரைமணி நேரம் தண்ணியில ஊற வெச்சு எடுத்து, அப்படியே மூணு நாள் வெச்சுட்டா முளை விட்டுடும். அதைத்தான் தொட்டியில விதைக்கணும். காலை நேரத்துலதான் கீரை விதைகளை விதைக்கணும். முட்டைக்கோஸ் பயிர்ல வாழை மாதிரியே பக்கக் கன்னு வரும். மூணு மாசத்துல முட்டைக்கோஸ் அறுவடை முடிஞ்சதும், அதே இடத்துல பக்கக் கன்னை வளர விடாம வேற இடத்துல புது மண் மாத்தி நடவு செய்யணும். அப்பத்தான் நல்ல மகசூல் கிடைக்கும். இப்படிச் சின்ன சின்ன விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டா போதும்... மாடித் தோட்டத்துல மகசூலை அள்ளிடலாம்’’ என்ற ஷிஜி பராமரிப்பு முறைகள் பற்றியும் பகிர்ந்தார்.

வாரம் ஒரு முறை தொழுவுரம்! 
               ‘‘பக்கத்து வீட்டுல மாடு வளக்குறாங்க. அவங்ககிட்ட தொழுவுரம் வாங்கி, ஒவ்வொரு தொட்டிக்கும் வாரத்துக்கு ஒரு தடவை ஒரு கையளவு தொழுவுரம் போடுவேன். வீட்டுல அடிக்கடி மீன் சாப்பிடுவோம். அதனால, தலை, வால்னு மீன்கழிவுகள் தாராளமாகக் கிடைக்கும். அந்தக் கழிவுகளையும் ஒவ்வொரு தொட்டியிலயும் கையளவு போட்டு மூடி வெச்சுடுவேன். அதே மாதிரி முட்டை ஓடுகளையும் போடுவேன். அதனால காய்கறிச் செடிகள் வஞ்சனையில்லாமக் காய்க்குது’’ என்ற ஷிஜி நிறைவாக, ‘‘எங்க வீட்டுக்குக் காய்கறிகளை விலைகொடுத்து வாங்கி வருஷக் கணக்காகுது. தினமும் சாயங்காலம் மாடியில ஒரு சுத்து வந்து செடிகளைப் பாத்தா... அன்னிக்கு இருந்த டென்ஷன் எல்லாம் காணாம போயிடும். இயற்கை முறையில விளையறதால உடம்புக்கும் கெடுதல் இல்லை. மொத்தத்துல எங்க உடம்பையும் மனசையும் இந்த மாடித் தோட்டம்தான் ஆரோக்கியமா வெச்சுக்கிட்டிருக்கு’’

‘தேவைகள்தான் கண்டுபிடிப்புகளின் தாய்’ என்று சொல்வார்கள்.. அதுபோல நீங்கள் நேரடியாக தோட்டம் அமைக்கும்போது கிடைக்கும் அனுபவங்கள் கற்றுக் கொடுப்பதை யாராலும் கற்றுக்கொடுத்துவிட முடியாது. தொடக்கத்தில் நடவுசெய்த விதைகள் சில முளைக்காமல் போகலாம். அதற்குக் காரணம் தரமில்லாத, முளைப்புத்திறன் குறைந்த விதையாக இருக்கலாம்.. முறையற்ற பாசனமாக இருக்கலாம்.. ஊட்டம் இல்லாமல் இருக்கலாம்.. இப்படி எத்தனையோ பிரச்னைகள் காரணமாக முளைப்பதில் தாமதமாகலாம் அல்லது முளைக்காமலே கூடப் போகலாம். ஆனால், அதற்காக துவண்டுவிடக்கூடாது. வெடிகுண்டுக்கு பிளக்காத கடும் பாறைகளில் கூட, தனது வாழ்தலுக்காக வேரை இறக்கும் வல்லமை படைத்தவை தாவரங்கள். அப்படியிருக்க அது வாழ்வதற்கு தேவையான அத்தனை வசதியையும் நாம் செய்து கொடுத்திருக்கும்போது எப்படி முளைக்காமல் போகும். பிரச்னை எங்கே இருக்கிறது என்பதை ஆராய்ந்து சரிசெய்தால் போதும் செடிகள் காய்த்து தள்ளி விடும் .

                      கம்ப்யூட்டர் மூலம் தோட்டக்கலை! கம்ப்யூட்டர் வரைபடம் மூலம் அழகுத்தோட்டம் அமைக்கும் கலை அண்மைக் காலத்தில் பிரபலமடைந்து வருகிறது. இதன் சிறப்பம்சம் எந்த இடத்தில் என்ன வகை செடி இருந்தால் அழகாக இருக்கும் என்பதை முன் கூட்டியே கம்ப்யூட்டர் வரைபடம் மூலம் பார்க்க முடியும். நமது ரசனைக்கு ஏற்றபடி செடிகளை மாற்றி வைத்து பார்க்கலாம். இதனால் கால விரயமும், பணமும் மிச்சமாகும். கோவையிலிருக்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் உள்ள வடக்கு மற்றும் தெற்கு விருந்தினர் இல்லங்களில் இந்த முறையைப் பயன்படுத்தி அழகுத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளன.

              தனியார் நிறுவனங்கள் கம்ப்யூட்டர் வரைபடம் வரைய பயிற்சி அளித்து வருகின்றன. கம்ப்யூட்டர் ஆட்டோ டிசைனிங், ஆர்க்கிடெக்ச்சர், 3-டி மேக்ஸ் என பலவகையான அழகுத் தோட்ட வரைபடக்கலை பயிற்சிகள் உள்ளன. ஓரளவு கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அறிவும், செடி-கொடிகளைப் பற்றிய விவரங்களும், ஆர்வமும் இருந்தால் இந்தத் துறையில் நிபுணராகவும் வரமுடியும். இந்தத் துறையில் படித்து முடிப்பவர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்பும் காத்திருக்கின்றன.

No comments:

Post a Comment